எரிசக்தி தட்டுப்பாடு குறித்து அச்சப்பட வேண்டாம்; தமிழகத்தில் பிரதமர் மோடி
மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து இந்திய மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், கொரோனா பெருந்தொற்றை 140 கோடி மக்கள் எப்படி ஒற்றுமையுடன் முறியடித்தார்களோ, அதேபோல இச்சவாலையும் இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் நலனே எப்போதும் எமக்கு முதன்மையானது என்றும், வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தின் ஆளும் திமுக அரசை கடுமையாகச் சாடிய பிரதமர், தமிழ்நாடு தற்போது ஒரே குடும்பத்தின் ஏ.டி.எம். ஆக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். தி.மு.க.வின் அறிவியல் ஊழல் முறைமை மூலம் திரட்டப்படும் பணம் அனைத்தும், ஆறுகள் கடலில் கலப்பது போல ஒரு குடும்பத்திடமே சென்றடைவதாகவும் அவர் விமர்சித்தார்.
அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மாறினாலும் அதிகாரம் மட்டும் ஒரு குடும்பத்தைச் சுற்றியே இருப்பதாகவும், இது தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைச் சிதைப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகள் மற்றும் காவிரி டெல்டா விவகாரங்களில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறிய பிரதமர், இயற்கை வளங்களை அழிக்கும் மணல் கொள்ளைக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அதேவேளையில், தமிழகத்தின் வளர்ச்சிக்காக 2014 முதல் மத்திய அரசு சுமார் 3இலட்சம் கோடி ரூபா நிதி ஒதுக்கியுள்ளதை அவர் பட்டியலிட்ட அவர் தேசிய நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகள் மற்றும் மதுரை விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்கள் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா மேம்படும் என்றும், குறிப்பிட்டார்.
குறிப்பாக 'மதுரை மல்லி' போன்ற உள்ளுர் பொருட்கள் சர்வதேச சந்தைக்குச் செல்ல வழிவகை செய்யப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.