மோட்டார் சைக்கிள் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரிப்பு: 7 மாதங்களில் 749 பேர் பலி! தலைக்கவசம் குறித்து எச்சரிக்கை
இலங்கையில் தற்போது இடம்பெறும் வீதி விபத்துகளில் அதிகளவிலான உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள் விபத்துகள் காரணமாகவே ஏற்படுவதாக தேசிய வீதி பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தேசிய வீதி பாதுகாப்புச் சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் முறையான தரநிலையைக் கொண்ட பாதுகாப்புத் தலைக்கவசத்தை பயன்படுத்துவதன் மூலம் விபத்துகளின்போது ஏற்படும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் கணிசமாகக் குறைத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
ஜனவரி 01 முதல் ஜூலை 31, 2026 வரை நாட்டில் மொத்தம் 1,626 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.
கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,585 விபத்துகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அதே காலப்பகுதியில் விபத்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
7 மாதங்களில் 749 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலி
இந்த ஆண்டு முதல் ஏழு மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 749 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கருத்திற்கொண்டு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மட்டுமன்றி, அவர்களுடன் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
தனது உயிரையும், தன்னுடன் பயணிப்பவரின் உயிரையும் பாதுகாக்கும் வகையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு சுமார் 1,000 மோட்டார் சைக்கிள் உயிரிழப்புகள்
தேசிய வீதி பாதுகாப்புச் சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவிக்கையில், இலங்கையில் ஒரு வருடத்தில் சுமார் 2,500 முதல் 2,700 வரையானோர் வீதி விபத்துகளில் உயிரிழப்பதாகவும், அவர்களில் சுமார் 1,000 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக மோட்டார் சைக்கிள் விபத்துகளைக் குறைப்பதற்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு அரிசி விலையில் 5 ரூபாய் மோசடி: முன்னணி ஆலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!
விபத்துகளின்போது ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு தலையில் ஏற்படும் கடுமையான காயங்கள் முக்கிய காரணமாக இருப்பதால், தரமான தலைக்கவசம் அணிவது மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.
SLS முத்திரையுள்ள தலைக்கவசம் அவசியம்
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பயன்படுத்தும் தலைக்கவசம் SLS தரநிலையைப் பூர்த்தி செய்ததாக இருக்க வேண்டும் எனவும் தேசிய வீதி பாதுகாப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
இதற்காக சர்வதேச தர நிர்ணய நிறுவனம், நுகர்வோர் சேவை அதிகாரசபை மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் விசேட திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தலைக்கவசம் அணிவது வெறுமனே சட்டத்தைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கை அல்ல என்றும், விபத்தொன்றின் போது உயிரைக் காப்பாற்றக்கூடிய மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.