மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல்: கட்டடத்துக்கு தீ வைத்த கைதிகள் – துப்பாக்கிச் சத்தத்தால் பரபரப்பு!
மஹர சிறைச்சாலை வளாகத்துக்குள் இன்று சனிக்கிழமை (01) மாலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோதலைத் தொடர்ந்து சிறைச்சாலையில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவியுள்ளதுடன், இதில் கைதிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைதிகள், பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் சிறைச்சாலையின் ஒழுக்கக் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலகத்துக்குத் தீ வைத்துள்ளனர் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிக சிறை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) குவிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையை ஆராய பல விசேட பொலிஸ் குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.
இன்று மதியம் கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்கள், சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படவில்லை. சிறைச்சாலை வளாகத்துக்குள்ளிருந்து பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக சிறைக்கு வெளியே காத்திருக்கும் உறவினர்கள், ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் குறித்து சிறைச்சாலைத் திணைக்களம் இதுவரை உத்தியோகபூர்வமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.
தற்போது நிலவும் பதற்றத்தைக் குறைக்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விவரங்களுக்காகக் காத்திருக்கவும்…