இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளால் 1,749 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இம்மாதம் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை இலங்கையில் உயிரிழப்பை ஏற்படுத்திய வீதி விபத்துகள் மொத்தம் 1,654 பதிவாகியுள்ளன. இவற்றில் சிக்கி 1,749 பேர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவை மேற்பார்வையிடும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனைத் தெரிவித்தார்.
மேலும், கடுமையான விபத்துகளைத் தொடர்ந்து 4,556 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அல்லது சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்றும், 7,295 பேர் சிறிய அளவிலான விபத்துகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இக்காலப்பகுதியில் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த மேலும் 3,232 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
விபத்துகளில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் பின்வருமாறு:
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்: 617 பேர்
பாதசாரிகள்: 576 பேர்
பயணிகள்: 173 பேர்
வாகன ஓட்டுநர்கள்: 139 பேர்
பின் இருக்கை பயணிகள்: 122 பேர்
சைக்கிள் ஓட்டுநர்கள்: 119 பேர்