பஸ் தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துகிறீர்களா? எச்சரிக்கும் பொலிஸ் - இனி கடும் நடவடிக்கை!
பஸ் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தி, பொதுப் போக்குவரத்து பஸ்களுக்கு இடையூறு விளைவிக்கும் சாரதிகளுக்கு எதிராகத் தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதற்கான விசேட அறிவுறுத்தல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
பஸ் நிறுத்துமிடங்களில் பிற வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பஸ் சாரதிகள் பஸ்களை வீதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக வீதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகள் பஸ்களில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகின்றது.
அத்துடன், சக்கர நாற்காலிகள் (Wheelchairs) மூலம் பயணிக்கக்கூடிய நவீன பஸ் சேவைகளுக்கு இத்தகைய தடைகள் பெரும் சவாலாக அமைந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த அந்த இடங்கள் தடைகளின்றி இருப்பது அவசியமாகும்.
எனவே, அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, பஸ் தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்குப் பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பஸ் நிறுத்தத்தை அணுகும் பகுதியில் இருந்து 30 மீற்றர் வரையிலும், வெளியேறும் பகுதியில் இருந்து 15 மீற்றர் வரையிலும் பிற வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வசதி கொண்ட இடங்களில், அணுகும் பகுதியில் 15 மீற்றர் தூரத்துக்கும், வெளியேறும் பகுதியில் 10 மீற்றர் தூரத்துக்கும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்குப் பணிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை முறையாக நிறுத்தி, பயணிகளின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.