பலத்த காற்று மற்றும் மழை குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் செயற்படும் பல நாள் மீன்பிடி மற்றும் கப்பல் சமூகத்தினரின் விசேட அவதானத்திற்காக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடற்பரப்புகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மக்கள் உடனடியாக கரையில் பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளமையினால், நாடு முழுவதும் நிலவும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களில் தீவில் மழையின் நிலை தற்காலிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.