போர் பதற்றங்களுக்கு இடையே பிரிட்டன் மன்னரின் அமெரிக்கப் பயணத்தை உறுதி செய்த டிரம்ப்!
மேற்காசியாவில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரிட்டன் மன்னர் சார்லஸின் திட்டமிடப்பட்ட அமெரிக்க அரசுமுறைப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இருப்பினும், இந்தக் கோரிக்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "மன்னர் சார்லஸ் எனது நெருங்கிய நண்பர்; அவர் மிக விரைவில் இங்கு வரப்போகிறார். அவருக்காக ஒரு பிரம்மாண்டமான அரசு விருந்து (State Dinner) நடைபெறவுள்ளது. அது ஒரு சிறப்பான நிகழ்வாக அமையும்" என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.
பிரிட்டனுக்கான அமெரிக்கத் தூதர் வாரன் ஸ்டீபன்ஸ் (Warren Stephens), லண்டனில் நடைபெற்ற பிரிட்டிஷ் வர்த்தக சபை மாநாட்டில் பேசுகையில், மன்னரின் பயணத்தை ரத்து செய்வது ஒரு "பெரிய தவறு" (Big Mistake) என்று எச்சரித்தார்.
இந்தப் பயணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (Congress) மன்னர் சார்லஸ் உரையாற்றுவதற்குச் சபாநாயகர் மைக் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா ஆகியோர் வரும் ஏப்ரல் மாதம் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் பிரிட்டன் மன்னர் இவராவார்.
ஈரானுடனான போர்ச் சூழலில் இந்தப் பயணம் ஒரு வலுவான ராஜதந்திர செய்தியை உலகிற்கு வழங்கும் என வெள்ளை மாளிகை கருதுகிறது. இருப்பினும், பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களைக் கருத்தில் கொண்டு, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் (Downing Street) இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலை வழங்கவில்லை.
