தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவு: வாக்குப்பதிவுக்கு முன் அமலில் வந்த கடும் விதிமுறைகள்
தமிழக அரசின் பதவிக்காலம் மே 10ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது; வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும்.
தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு போன்ற பணிகளை முடித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி முக்கியமாக மோத, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் நான்கு முனைப் போட்டி நிலவியது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சித் தலைவர்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து பிரசாரம் செய்தனர். இந்நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் பிரிவு 126ன் கீழ் உடனடியாக பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்குப்பதிவு முடியும் வரை எந்தவொரு பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவும், தேர்தல் தொடர்பான பிரசாரம் எந்தவொரு ஊடகங்களிலும் — சமூக வலைதளம், தொலைக்காட்சி, வானொலி அல்லது இணையம் — வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர்களை பாதிக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தியும் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது. இந்த விதிகளை மீறுவோர் மீது சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
தொகுதிக்கு வெளியிருந்து வந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் மாலை 6 மணிக்குப் பிறகு அங்கிருந்து வெளியேற வேண்டும். தங்கும் விடுதிகள், மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளிநபர்கள் தங்கியுள்ளார்களா என்பது கண்காணிக்கப்படும்.
மேலும், வேட்பாளர்களுக்கான வாகன அனுமதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். வாக்காளர்களை வாகனங்களில் ஏற்றி வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லும் செயல்கள் சட்டவிரோதமாக கருதப்பட்டு தண்டனைக்குரியதாகும்.
வாக்குச்சாவடிகளுக்கு அருகில் அமைக்கப்படும் தேர்தல் அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன், 100 மீட்டர் தூரத்திற்கு வெளியே அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
