இன்று முதல் பேருந்து சேவைகளைக் குறைக்க முடிவு - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
செலவுகள் அதிகரித்து வரும் நிலையிலும், கட்டணத் திருத்தங்கள் தாமதமாகி வருவதாலும், இன்று (8) முதல் பேருந்து சேவைகளைக் குறைப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) அறிவித்துள்ளது. நேற்று (7) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, நிதிச் சுமையின் காரணமாக ஏற்கனவே 25 சதவீத பேருந்துகள் வீதிகளில் இயங்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இத்துறையில் இயல்புச் செயல்பாடுகளில் 50 சதவீதத்திற்கும் மேலாகச் சேவைகளைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் தெரிவித்தார். "இந்த வாரத்திலிருந்து எங்களது சேவைகளைச் சரிசெய்வதற்கு முடிவு செய்துள்ளோம். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் அமைச்சருடனான கலந்துரையாடல்களில் இடைக்கால நிவாரணம் குறித்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.
ஜூலை மாத தொடக்கத்தில் வருடாந்த கட்டணத் திருத்தம் செய்யப்பட வேண்டும், அதைச் செயல்படுத்துவதற்கு எங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை உண்டு. எனினும், எரிபொருள் செலவுகளில் சில நிவாரணங்களை நாங்கள் கோரியிருந்தோம், அது வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, சேவைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பாடசாலை திறக்கும் நேரம், மதியம் மற்றும் மாலை அலுவலக நேரங்கள் போன்ற உச்ச நேரங்களில் மட்டுமே அத்தியாவசிய சேவைகளைத் தொடர்வோம். இதன் பொருள் ஒட்டுமொத்த சேவைகள் சுமார் 50 சதவீதமாகக் குறையும்" என்றார்.
வரவிருக்கும் கட்டணத் திருத்தம், அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக 20 முதல் 25 சதவீதம் வரை உயர்வதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார். சேவைத் தடைபாட்டிற்கான பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் என்றும் அவர் கூறினார். இதனால், பொதுமக்களின் அன்றாடப் பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.