விளையாடியதற்காக 5ஆம் வகுப்பு மாணவர்களை கடுமையாக தாக்கிய அதிபர்!
வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட மாணவர்கள், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள், பிள்ளைகளை பரிசோதித்தபோது அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டனர்.

பாறுக் ஷிஹான்
அம்பாறை நகர அரச பாடசாலை ஒன்றில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 9 பேரை, முழங்காலில் நிற்க வைத்து அதிபர் கடுமையாக தாக்கியுள்ளார் என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 15ஆம் திகதியன்று பாடசாலை நேரத்திற்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றன. அன்றைய தினம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இடைவேளையின் போது, கழிப்பறைக்குச் சென்ற பல மாணவர்கள் தண்ணீர் விசிறி, விளையாட்டில் ஈடுபட்டதாக வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, மறுநாள் 16ஆம் திகதி பிற்பகல் சுமார் 3 மணியளவில் பாடசாலை அதிபர் தனது கையில் மூன்று பிரம்புகளை எடுத்து, 9 மாணவர்களையும் வரவழைத்து, முழங்காலில் நிற்க வைத்து, அவர்களின் கைகளை சுவரில் வைத்து பிரம்புகளாகல் முதுகு மற்றும் கால்களில் கொடூரமாக அடித்துள்ளார்.
வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட மாணவர்கள், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள், பிள்ளைகளை பரிசோதித்தபோது அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள், கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ள தயாராகிய வேளை, அப்பாடசாலை அபிவிருத்தி சங்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் குழு, தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது.
எனினும், சிறுவர் மறுவாழ்வு மையம், அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் குறித்த பிள்ளைகள் மீதான தாக்குதல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து கல்வி அலுவலகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் கூறினார்.
தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தாய் ஒருவர், “நாங்கள் எங்கள் குழந்தைகளை கற்றுக்கொள்ள பள்ளிக்கு அனுப்புகிறோம். குழந்தைகள் வித்தியாசமான செயல்களைச் செய்பவர்கள். இந்தக் குழந்தைகள் சிறு வயதுடையவர்கள். கால்நடைகளை அடிப்பது போல் அவர்களை அடிக்க முடியுமா?, என் குழந்தைகள் அந்தப் பள்ளிக்குத் திரும்பப் போக முடியாது என்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் இம்முறை தரம் 5 பரீட்சை எழுதுகிறார்கள். அந்தக் குழந்தைகளின் மனநிலை இப்போது எப்படி இருக்கும்” என்றார்.
மேற்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிபர், ஒரு பௌத்த துறவி என்பது சுட்டிக்காட்டத்தக்கது.