எப்ஸ்டீன் ஆவணங்கள் சர்ச்சை: இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களுக்கு எச்சரிக்கை
அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரித்தானிய ராஜகுடும்பத்தைச் சுற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த ஆவணங்களில் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
வேலை வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி பல இளம்பெண்களை சீரழித்ததாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான எப்ஸ்டீன் விவகாரம் உலகளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த விவகாரத்தில் இளவரசர் ஆண்ட்ரூவின் பெயர் முன்பே இடம்பெற்றதால் ராஜகுடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் தற்போது வெளியான சமீபத்திய ஆவணங்கள் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன. ஆண்ட்ரூ மற்றும் சாரா ஃபெர்குசனின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியும், தங்கள் தாயுடன் அமெரிக்காவின் மியாமியில் எப்ஸ்டீனை சந்தித்ததாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் எப்ஸ்டீனை சந்தித்த காலத்தில், சிறுமியை சீரழித்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பிறகு அவர் வீட்டுச் சிறையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர்கள் சந்தித்த நபர் குறித்து அறிந்திருந்திருக்க வாய்ப்புள்ளது என்ற கருத்துகளும் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், எப்ஸ்டீன் அனுப்பியதாக கூறப்படும் சிலரை இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி பக்கிங்காம் அரண்மனைக்கு அழைத்து சென்று சுற்றிக் காட்டியதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு தற்போது எச்சரிக்கை செய்தி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சர்ச்சை மேலும் பெரிதாகலாம் என்பதால் அவர்கள் எதிர்காலத்தில் அதிக கவனத்துடன் நடக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பான சர்ச்சைகள் எழுந்தபோதும், இளவரசிகள் தங்கள் பொது பணிகளை வழக்கம்போல் தொடர்வார்கள் என்று அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் தற்போது அவர்களுடைய பெயர்களும் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதால் கடந்த சில வாரங்களாக ராஜகுடும்பம் அமைதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
The Telegraph பத்திரிகையின் ராஜகுடும்ப பிரிவு ஆசிரியர் ஹன்னா ஃபர்னஸ் கூறுகையில், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி தற்போது அரண்மனையில் முன்பிருந்த ஆதரவு குறைந்திருப்பதை உணர்ந்திருக்கக்கூடும் என தெரிவித்தார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.