ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் 'டோல் கேட்' அரசியல்! கப்பல்களுக்கு ரூ. 17 கோடி வரை கட்டணம்? புதிய மசோதா தயார்!
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையே போர் தொடங்கி இன்றுடன் (மார்ச் 26, 2026) 26 நாட்கள் ஆகின்றன. இந்தப் போரின் ஒரு பகுதியாக, உலக எரிசக்தி தேவையில் 25 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது.
இதனால் சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் 'பாதுகாப்புக் கட்டணம்' (Security Fee) வசூலிக்கும் புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்துள்ளது.
ஈரானிய நாடாளுமன்றத்தின் உள்கட்டமைப்பு ஆணையத் தலைவர் முகமதுரெசா ரெசாய் கூச்சி (Mohammadreza Rezaei Kouchi) இது குறித்துப் பேசுகையில், "ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பொருட்கள் கடந்து செல்லும்போது கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றிலும் இயல்பானதே; ஒரு சர்வதேசக் காரிடாராக நாங்கள் இதற்குப் பாதுகாப்பு வழங்குகிறோம், எனவே கப்பல்கள் கட்டணம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தகவல்களின்படி, ஒரு கப்பலுக்கு சுமார் $2 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 17.2 கோடி) வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் எனத் தெரிகிறது. சில கப்பல்கள் ஏற்கனவே சீனப் பணமான 'யுவான்' (Yuan) மூலம் இந்தக் கட்டணத்தைச் செலுத்திப் பாதுகாப்பாகக் கடந்து சென்றிருப்பதாகச் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து ஆய்வு நிறுவனமான 'லாயிட்ஸ் லிஸ்ட்' (Lloyd's List) தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்த 'டோல் கேட்' (Toll Booth) நடவடிக்கை சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி, ஹார்முஸ் ஒரு திறந்தவெளிப் பாதை என்பதால் எந்த நாடும் தனிப்பட்ட முறையில் கட்டணம் வசூலிக்க முடியாது. இருப்பினும், போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைச் சரிசெய்யவும், அமெரிக்காவின் தடைகளை முறியடிக்கவும் ஈரான் இந்த உத்தியைக் கையாண்டுள்ளது.
ஏற்கனவே எரிபொருள் விலையேற்றத்தால் தவிக்கும் இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஈரானின் இந்த அறிவிப்பால் மேலும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும். இந்த மசோதா அடுத்த வாரம் ஈரானிய நாடாளுமன்றத்தில் இறுதி செய்யப்பட்டுச் சட்டமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
