ஹார்முஸ் நெருக்கடி: போர்க்களத்தில் சிக்கிய 3,200 கப்பல்கள் – உணவு, தண்ணீர் இன்றி தவிக்கும் மாலுமிகள்
வளைகுடா பிராந்தியத்தில் நீடித்து வரும் போர் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கம் கடல் வர்த்தகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் 21ஆம் நாளை எட்டியுள்ள சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகின் முக்கிய கடல்வழிகளில் ஒன்றான இந்த பாதையில் ஆயிரக்கணக்கான கப்பல்கள் சிக்கிக் கொண்டுள்ளன.
இந்த நிலைமை, சர்வதேச வர்த்தகத்தை நேரடியாக பாதிக்கும் அளவிற்கு பெரிதாக மாறியுள்ளது.தற்போது சுமார் 3,200 வணிகக் கப்பல்கள் கடலில் நகர முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
போரின் அச்சம் காரணமாக இந்த கப்பல்கள் எந்த துறைமுகத்திற்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் கப்பல்களில் உள்ள மாலுமிகள் கடும் சிக்கலில் சிக்கியுள்ளனர். உணவு மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் தட்டுப்பாடாகி, மனிதாபிமான பிரச்சினை உருவாகியுள்ளது.
இந்த கப்பல்கள் துறைமுகங்களை தொடர்பு கொண்டு உதவி கோரினாலும், பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மாலுமிகள் அத்தியாவசிய தேவைகளுக்கே கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலர் கப்பல்களை கைவிட்டு வெளியேற முயன்றால், கட்டுப்பாடின்றி கடலில் மிதக்கும் எண்ணெய் மற்றும் ரசாயன கப்பல்கள் பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முன்னதாக 2021ஆம் ஆண்டு சூயஸ் கால்வாயில் சுமார் 400 கப்பல்கள் சிக்கியது உலக கவனத்தை ஈர்த்தது. ஆனால் தற்போது 3,200 கப்பல்கள் ஒரே நேரத்தில் போர்க்களத்தின் நடுவே சிக்கியிருப்பது, உலக பொருளாதாரத்தையே அதிர வைக்கும் சூழலாக பார்க்கப்படுகிறது.
இந்த நெருக்கடி விரைவில் தீர்க்கப்படாவிட்டால், எரிசக்தி விலை உயர்வு முதல் சரக்கு தட்டுப்பாடு வரை பல்வேறு பிரச்சினைகள் தீவிரமடையும் அபாயம் நிலவுகிறது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.