க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு: ஜூன் 25 முதல் மறுசீராய்வு விண்ணப்பங்கள்
பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான doenets.lk தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தங்களது பெறுபேறுகளை இணையத்தின் மூலம் பார்வையிட முடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான doenets.lk தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். பெறுபேறுகளைப் பார்வையிட தேவையான தகவல்களை வழங்கி, தங்களது முடிவுகளை எளிதாக அறிந்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தமாக 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர். நாடு முழுவதும் 3,547 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெற்றதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, தங்களது பெறுபேறுகள் தொடர்பாக மறுசீராய்வு செய்ய விரும்பும் பரீட்சார்த்திகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பெறுபேறுகளின் மறுசீராய்விற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 25ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 07ஆம் திகதி வரை இணையவழி (ஒன்லைன்) முறையில் சமர்ப்பிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.