மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் ஜே.ஜே முரளிதரனுக்கு வாழ்த்து

முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய  அரசாங்க அதிபருக்கான வெற்றிடத்திற்கு அரசு இவரை நியமித்துள்ளது. 

டிசம்பர் 18, 2023 - 02:41
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் ஜே.ஜே முரளிதரனுக்கு வாழ்த்து

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நாளை திங்கட்கிழமை (18) கடமையேற்கும் திருமதி ஜே.ஜே முரளிதரனை வாழ்த்திப் பாராட்டுவதில் நாம் பெருமிதமடைகின்றோம் என ஸ்ரீ லங்கா மீடியா போரம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்செய்தியில், 

“புதிய அரச அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள திருமதி ஜே.ஜே முரளிதரன், கிழக்கு மாகாணத்தில் ஒரு சிரேஷ்ட நிர்வாக அதிகாரி என்பதுடன், அனைத்தின மக்களையும் ஒரே கண் கொண்டு பார்க்கும் அதிகாரிகளில் ஒருவராகவும் அனைத்தின மக்களும் ஒற்றுமை, சந்தோசமாக வாழ வேண்டுமென்று எண்ணும் உயரிய எண்ணம் கொண்டவராகவும் திகழ்கின்றார்.

“அந்த வகையில், அனைத்தின மக்களுக்கும் இவரின் உயர்தரமான சேவை பாகுபாடின்றி கிடைக்கப்பெறும் என நாம் நம்புகின்றோம்.

“இவ்வாறான ஒருவர் எமது மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக, அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது.

“இப்பதவிக்கு தகுதியான ஒருவரை நியமித்த ஜனாதிபதி, பிரதமருக்கும் மற்றும் மாவட்டத்தின் அரசியல் பிரமுகர்களுக்கும் எமது மகத்தான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

“மேலும், இவர் கிழக்கு மாகாண சபையின் பல்வேறு உயர்பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட காலப்பகுதியில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும் மிகச்சிறப்பாகக்  கடமையாற்றியவர்.

“முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய  அரசாங்க அதிபருக்கான வெற்றிடத்திற்கு அரசு இவரை நியமித்துள்ளது. 

“அந்த வகையில், பொறுப்புக்களை உத்தியோபூர்வமாக மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நாளை ஏற்கவுள்ளார்.

'அவரின் பணி இன, மத பேதங்களுக்கப்பால் சிறப்புற வாழ்த்திப் பாராட்டுகின்றோம்” என ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!