ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம்; அச்சத்தில் மக்கள்
அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியாக விஸ்தரிப்பு செய்யப்பட வேண்டும் என்பது சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாகும்.

சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியிலுள்ள ஒடுக்கமான பாலம் பல தசாப்தங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால், அந்த பாலத்தில் பயணிப்போர் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலை, உப தபாலகம், பாடசாலை, பள்ளிவாசல்கள் மற்றும் தொழில் நிமித்தமான பயணங்களை மேற்கொள்வோர் இந்தப் பாலத்தின் வழியே பயணிக்கின்றனர்.
எனவே, அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியாக விஸ்தரிப்பு செய்யப்பட வேண்டும் என்பது சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாகும்.
பிரதேச மக்களால் தெரிவுசெய்யப்பட்டு வருகின்ற மக்கள் பிரதிநிதிகள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை தருவதாக தேர்தல் காலங்களில் மேடைகளில் வாக்குறுதி வழங்கினாலும் அவை எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அதிகாரிகள் பலரும் பல்வேறு காரணங்களை கூறிவருகின்ற நிலையில், தமக்கான உச்சகட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்க முன்வர வேண்டும் என சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, இந்தப் பாலம் 5 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(நூருல் ஹுதா உமர்)