பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயது யுவதியின் சடலம் துஷ்பிரயோகம் - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயது யுவதியின் சடலம் துஷ்பிரயோகம் - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

டிக்கோயா, கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயது யுவதியின் சடலம் மீது துஷ்பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த 25ஆம் திகதி, ஹட்டன், எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் யுவதி உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிர்மாய்ப்பு செய்து கொண்ட யுவதியின் சடலம், அன்றைய தினம் மாலை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவத்தை கேள்வியுற்ற ஹட்டன் பொதுமக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுகூடி “பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம், வைத்தியசாலை நிர்வாகமே உண்மையை வெளிக்கொண்டுவா” போன்ற கோஷங்களை எழுப்பியும் பதாதைகளையும் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரி, 25ஆம் திகதி சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், அடுத்த நாள் பரிசோதனையின் போது விசித்திரமான மாற்றங்கள் எதுவும் கண்காணிக்கப்படவில்லை எனவும் கூறினார். எனினும், கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், பிரேத அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் குறித்த மூவர் அங்கு சென்றுவந்தது பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய மூவரையும் இன்று மாலை 4 மணிக்குள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; அதேவேளை பொதுமக்களின் போராட்டமும் தொடர்கிறது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர