நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்; வெளியான அறிவிப்பு
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பெமரூத்ன அறிவித்துள்ளார்.
அரசு அனுமதி பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள், மதுபானக் கூடங்கள், உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகள் ஆகிய இடங்களிலும் இந்த 2 நாட்களுக்குப் பூரணமாக மதுபான விற்பனை இடைநிறுத்தப்படும்.
விடுமுறை காலத்தில் மதுவரி சட்டங்களை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் உரிமதாரர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் சட்டவிரோத மதுபான விற்பனை அல்லது கடத்தல்கள் தொடர்பாக 1913 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும்.
மேலும், பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மதுபான விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் காலி, அனுராதபுரம், கண்டி, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் விசேட மதுவரி அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
