மீண்டும் இலங்கைக்கு விமான சேவையை ஆரம்பித்தது சீனா

சீன விமான நிறுவனமான "ஏர் சீனா" மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை தொடங்கியுள்ளதுடன், அதன் முதல் விமானம் இலங்கைக்கு வந்துள்ளது.
குறித்த விமானம் நேற்று (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர், இந்த சீன விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனா ஏர்லைன்ஸ் விமானம் CCA-425 நேற்று இரவு 08.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அந்த விமானத்தில் 142 பயணிகளும் 09 விமான ஊழியர்களும் இருந்தனர்
"Air China" விமான சேவையானது ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீனாவின் செங்டுவில் இருந்து இரவு 08.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.
மீண்டும் அதே விமானம் கட்டுநாயக்காவில் இருந்து அதே நாளில் இரவு 10.15 மணிக்கு சீனாவின் செங்டுவிற்கு புறப்பட உள்ளது. .
இந்த முதலாவது விமானத்தை வரவேற்க இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.