2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 முதல் – ரமழான் காலம் தடையல்ல!
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், பாடசாலை சீருடைகள் மற்றும் ‘சுரக்ஷா’ காப்புறுதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இந்தப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதி ரமழான் பெருநாள் காலத்துடன் இணைந்திருந்தாலும், பரீட்சை நடத்துவதற்கு அது எந்தத் தடையும் ஏற்படுத்தாது என சம்பந்தப்பட்ட தரப்பினர் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வில், பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் முன்வைத்த வாய்மூலக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், மாணவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், பாடசாலை சீருடைகள் மற்றும் ‘சுரக்ஷா’ காப்புறுதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6 முதல் 13 ஆம் தரம் வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கான சானிட்டரி நாப்கின் கொள்வனவுக்காக வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் ‘அஸ்வெசும’ நலத்திட்ட நன்மைகளைப் பெறாத மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக கல்வி அமைச்சு தேவையான தகவல்களைத் திரட்டிவருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்காலத்தில் பரீட்சை கால அட்டவணையை ஒழுங்குபடுத்தும் நோக்கில், புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்பாகவும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை டிசெம்பர் மாதத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாண்டிலிருந்து இந்தப் புதிய கால அட்டவணையை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.