இலங்கையில் பறக்கும் டாக்ஸிகள்: அடுத்த 4 மாதங்களுக்குள் சோதனை ஓட்டத்தை ஆரம்பிக்க திட்டம்
இலங்கையில் மின்சாரத்தில் இயங்கும் "பறக்கும் டாக்ஸி" (Flying Taxi) தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கான நடவடிக்கைகளை, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (CAASL) துரிதப்படுத்தியுள்ளது.
இதற்கென நாட்டின் முதலாவது மின்சார செங்குத்து ஏவுதல் மற்றும் தரையிறங்கும் (eVTOL) ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸை (Regulatory Sandbox) உருவாக்கும் பணிகளில் CAASL ஈடுபட்டுள்ளது.
ஈஹாங் இன்டெலிஜென்ட் (EHang Intelligent) நிறுவனத்தின் உலகளாவிய துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் (Global Fast-Track Programme) கீழ் முன்வைக்கப்பட்ட யோசனைகளை CAASL ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, அடுத்த நான்கு மாதங்களுக்குள் குறிப்பிட்ட சோதனை சூழலில் (Sandbox) முதற்கட்ட வணிக ரீதியிலான செயல்பாடுகளை இலக்காகக் கொண்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நான்கு மாத காலக்கெடு என்பது நாடு தழுவிய ரீதியில் வணிக ரீதியிலான பறக்கும் டாக்ஸி சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகக் கருத முடியாது. மாறாக, ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பாதுகாப்புக் காரணிகள், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுத் தேவைகளை மதிப்பீடு செய்வதற்காகவே இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.
இது தொடர்பாக ஈஹாங் (EHang) நிறுவனம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் CAASL ஆகியவற்றுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பில், ஒழுங்குமுறைத் தேவைகள், விமான விவரக்குறிப்புகள், உட்கட்டமைப்பு, வான்வெளி மேலாண்மை, பராமரிப்பு ஏற்பாடுகள் மற்றும் பணியாளர் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நான்கு மாத கால அவகாசம் என்பது தேவையான ஒழுங்குமுறை, தொழில்நுட்ப, செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகளின் வெற்றிகரமான பூர்த்தியைப் பொறுத்தே அமையும் என CAASL தெரிவித்துள்ளது.
இலங்கையில் மேம்பட்ட வான்வழி நகர்வு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஈஹாங் மற்றும் CAASL குழுவினருக்கு இடையே மேலும் பல தொழில்நுட்ப விவாதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
eVTOL தொழில்நுட்பம் என்றால் என்ன?
eVTOL என்பது மின்சாரத்தால் இயங்கும் விமானம் ஆகும். இவை சாதாரண விமானங்களைப் போல ஓடுதளங்கள் (Runway) இன்றி, செங்குத்தாக மேலே எழும்பவும் தரையிறங்கவும் கூடியவை. உலகளவில் பயணிகள் போக்குவரத்து மற்றும் மேம்பட்ட வான்வழி நகர்வு பயன்பாட்டுக்காக இந்தத் தொழில்நுட்பம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
