2029க்குள் 500 மெட்ரோ பஸ்கள்! நாடு முழுவதும் விரிவாகும் அநுர அரசாங்கத்தின் மெகா திட்டம் - யாழ்ப்பாணத்துக்கும் விரிவாக்கம்!
2029ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ பஸ்களின் எண்ணிக்கையை 500ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
மெட்ரோ பஸ்களின் சேவை, கொழும்பைத் தாண்டி ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது 104 புதிய மெட்ரோ பஸ்கள் நாட்டுக்கு வந்துள்ளதாகவும், அவை செப்டெம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள 10 மெட்ரோ பஸ்கள் மற்றும் ஜப்பானிடமிருந்து பெறப்பட்ட 7 பஸ்களுடன் சேர்த்து, மொத்தம் 121பஸ்களுடன் "கொழும்பு மெட்ரோ நகர்ப்புற சொகுசு" (Colombo Metro Urban Luxury) சேவை தொடங்கப்பட உள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின்படி, மெட்ரோ பஸ் திட்டம் கொழும்புடன் மட்டும் நின்றுவிடாமல் நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். அதன்படி, கொழும்புக்கு வெளியே இத்திட்டத்தின் மூலம் பயனடையும் முதல் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2029ஆம் ஆண்டுக்குள் 500 பஸ்களாக இந்த சேவையை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நிதி வழங்க உறுதியளித்துள்ளது.
வீதி கட்டுமானம் உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்கப்படுவதை பொது அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
“பொதுப் பணம் மக்களுக்குச் சொந்தமானது. எனவே, திட்டங்களைத் தாமதப்படுத்த நடைமுறை ரீதியாகவோ அல்லது தார்மீக ரீதியாகவோ யாருக்கும் உரிமை இல்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.