2026 உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் – பரீட்சை விதிமுறைகள் குறித்து கடும் எச்சரிக்கை!

பரீட்சை மண்டபத்துக்குள் கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், புளூடூத் சாதனங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2026 உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் – பரீட்சை விதிமுறைகள் குறித்து கடும் எச்சரிக்கை!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) இன்று (10) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது.

இன்று ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், நாடு முழுவதும் 2,532 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இவர்களில் 264,496 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளாகவும், 107,814 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் உள்ளனர்.

பரீட்சார்த்திகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையங்களுக்கு, பரீட்சை ஆரம்பிக்கப்படுவதற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாகவே வருகை தருமாறு, பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை, பரீட்சை மண்டபத்துக்குள் கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், புளூடூத் சாதனங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, பரீட்சைக்குத் தேவையற்ற குறிப்புகள் அல்லது ஏனைய பொருட்களை பரீட்சை மண்டபத்துக்குள் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும் பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சை விதிமுறைகளை மீறி பரீட்சை மோசடிகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.

கடந்த வருடங்களிலும் பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டதன் காரணமாக பல பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அனைத்துப் பரீட்சார்த்திகளும் பரீட்சை விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, எவ்வித மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் பரீட்சையை எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பரீட்சைக் காலப்பகுதியில் ஏதேனும் அவசர அல்லது அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், பரீட்சார்த்திகளுக்குத் தேவையான வசதிகள் மற்றும் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர