ரஜினிக்கு பயத்தை காட்டிய ரசிகர்.. பதறிப்போய் மிகபெரிய முடிவை மாற்றிய சம்பவம்

அதன் முதல் கட்டமாக வேளச்சேரியில் உள்ள அவருடைய பங்களாவை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற இயக்கத்திற்கு தானமாக கொடுத்துவிட்டார்.

ஏப்ரல் 1, 2022 - 00:32
ரஜினிக்கு பயத்தை காட்டிய ரசிகர்.. பதறிப்போய் மிகபெரிய முடிவை மாற்றிய சம்பவம்

சினிமாவில் படுபிஸியாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஒரு கட்டத்தில் அடிக்கடி இமயமலைக்கு சென்று வர ஆரம்பித்தார். சில காலமாகவே ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாக இருந்த அவருக்கு இமயமலை சென்று வந்த பிறகு நல்ல மாற்றம் கிடைத்தது.

இதனால் அவர் அனைத்தையும் துறந்து ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்ட நினைத்தார். அந்த சமயத்தில் அவர் வெளிப்படையாக தன் ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் நான் அனைத்தையும் துறந்துவிட்டு ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட போகிறேன் என்று அறிவித்தார்.

அதன் முதல் கட்டமாக வேளச்சேரியில் உள்ள அவருடைய பங்களாவை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற இயக்கத்திற்கு தானமாக கொடுத்துவிட்டார். இதைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் ஆவேசமாக கொந்தளிக்க ஆரம்பித்தனர். ஏனென்றால் அவருக்காக உயிரையே கொடுக்கும் அளவுக்கு தீவிர ரசிகர்கள் ரஜினிக்கு ஏராளமாக இருந்தனர்.
 
அப்படிப்பட்ட அந்த ரசிகர்கள் ரஜினி சினிமாவை விட்டு ஆன்மீக வாழ்க்கைக்கு செல்வதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள். இதனால் அவருடைய ரசிகர்கள் ரஜினியின் வீட்டின் முன் குவிந்தனர். அதில் ஒருவர் தலைவா நீங்கள் ஆன்மீகத்திற்கு சென்றால் நான் கையை அறுத்துக் கொள்வேன் என்று பிளேடை எடுத்து கையை கிழித்து கொண்டார்.

இதனால் பதறிப்போன ரஜினி நம்மளை நம்பி நமக்காக எதையும் செய்யும் அளவுக்கு இருக்கும் இந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார். அதன் பிறகுதான் ரசிகர்கள் அமைதி அடைந்தனர்.
 
பின்னர் தங்களுக்கு தானமாக வந்த ரஜினியின் பங்களாவை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் அவரிடமே திருப்பி கொடுத்து விட்டது. மேலும் உங்களின் மீது இவ்வளவு வெறியுடன் இருக்கும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று ரஜினியிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!