டி20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு அதிர்ச்சி: காயம் காரணமாக ஹசரங்க தொடரிலிருந்து விலகல்
சொந்த மண்ணில் விளையாடும் இலங்கை அணி அடுத்த கட்டமான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வலுவான அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் இலங்கை அணி தனது முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து 22 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
சொந்த மண்ணில் விளையாடும் இலங்கை அணி அடுத்த கட்டமான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் முக்கிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும் ஆல்ரவுண்டருமான வனிந்து ஹசரங்க காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹசரங்க மிகச் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும் பந்துவீசும் போது அவர் உடல் சிரமத்தை எதிர்கொண்டது கவனிக்கப்பட்டது.
போட்டிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தொடை நரம்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்த காயம் குணமடைய சில வாரங்கள் தேவைப்படும் என்பதால், அவர் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பந்து வீச்சு மட்டுமல்லாமல் பின் வரிசை பேட்டிங்கிலும் அணிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் திறன் கொண்ட ஹசரங்காவின் இல்லாமை இலங்கை அணிக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. அவரது அனுபவமும் ஆட்டத் திறனும் அணியின் சமநிலையை பாதுகாக்க முக்கிய பங்காற்றி வந்தது.
இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் பிப்ரவரி 12 ஆம் தேதி ஓமன் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் ஹசரங்க இல்லாத நிலையில் அணி எப்படி செயல்படும் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.