அதிரடி மறுசீரமைப்புத் திட்டங்கள் : இலங்கைக் கிரிக்கெட் புத்துயிர் பெறுமா?
இலங்கைக் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில், அதன் மறுசீரமைப்புக் குழு பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களையும் அதிரடி மாற்றங்களையும் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டங்கள், பாடசாலை மட்டம் முதல் தேசிய அணி வரை கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளன.
ஸ்ரபாடசாலை மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் நடுவர் செயற்பாடுகளை மேம்படுத்த இரண்டு நடுவர் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சர்வதேச மைதானங்களின் ஆடுகளங்களை கண்காணிப்பதற்கும், பாடசாலை மற்றும் கழக மைதானங்களுக்குத் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கும் ஒரு க்யூரெட்டர் மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய உயர் செயல்திறன் கட்டமைப்பு முதல் மாவட்ட மட்டங்கள் வரை பயிற்றுவிப்புத் தரத்தைச் சீரமைக்க, சர்வதேசப் பயிற்சியாளர் ஆஷ்லே ரோஸை இலங்கைக்கு அழைத்து வர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், வீரர்களின் உடற்தகுதி மற்றும் இயன்முறை மருத்துவப் பிரிவுகளை மறுசீரமைக்க அவுஸ்திரேலியாவின் முன்னாள் நிபுணர் அலெக்ஸ் கவுண்டூரிஸின் உதவி பெறப்படவுள்ளது.
பாடசாலைப் படிப்பை முடித்த பின்னர் 17 முதல் 22 வயதுக்குட்பட்ட பல திறமையான வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதைத் தடுக்க புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, தற்போதுள்ள 23 வயதுக்குட்பட்டோர் தொடருக்குப் பதிலாக, 21 வயதுக்குட்பட்டோர் (U21) போட்டிகளை அறிமுகப்படுத்துவது குறித்து குழு பரிசீலித்து வருகிறது. இது எதிர்கால தேசிய வீரர்களைச் சரியாக அடையாளம் காண உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண் வீரர்களின் நல்வாழ்வு, மேலாண்மை மற்றும் அவர்களின் நீண்ட கால வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமை மற்றும் அவர்களின் செயல்திறனைத் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் ஒரு புதிய வீரர் கண்காணிப்பு அமைப்பை (Player Tracking System) அறிமுகப்படுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆராய்ந்து வருகிறது.