இறுதி பேச்சுவார்த்தைக்கு முன் ஈரானை நோக்கி டிரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் பின்னணியில், கடந்த வாரம் பாகிஸ்தான் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும், அந்த பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த முடிவின்றி நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மற்றும் முக்கியமான இறுதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்க பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு முன்பாக டொனால்ட் டிரம்ப் ஈரானை நோக்கி கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது, “ஈரானுக்கு நியாயமான ஒப்பந்தம் ஒன்றை முன்வைக்க உள்ளோம். அதை ஏற்க மறுத்தால், அந்நாட்டின் மின் நிலையங்களும் பாலங்களும் உட்பட முக்கிய கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கும். எனது பிரதிநிதிகள் நாளை பாகிஸ்தானில் நடைபெறும் இறுதி பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். அதன் பின்னர் பேச்சுவார்த்தைக்கு இடமிருக்காது” என கூறினார்.
இந்தக் கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
