மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை: பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட இருவர் ஒரு மணித்தியாலத்துக்குள் கைது!
திருகோணமலை அநுராதபுர சந்திக்கு அருகிலுள்ள மதுபானக் கடையொன்றில் ரி56 ரக துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையிட்ட இரண்டு சந்தேகநபர்களை, சம்பவம் நடந்த ஒரு மணித்தியாலத்துக்குள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு 9:45 மணிக்கு மதுபானக் கடைக்குள் புகுந்த இருவர், ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து திருகோணமலை பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கப்பட்டது. உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் குழுவினர், தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தற்காலிக தங்குமிடம் ஒன்றில் பதுங்கியிருந்த சந்தேகநபர்களை விரைந்து கைது செய்தனர்.
ஹக்மன பகுதியைச் சேர்ந்த 54 மற்றும் 61 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜன்ட் எனவும், அவர் கிளிபுஞ்சிமலையிலுள்ள வெடிமருந்து களஞ்சியசாலையில் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 11,500 ரூபாய் பணம், கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், ரி56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்கள் கொண்ட ஒரு மெகசின் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.