19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் கைதான விவகாரம் - இரகசிய காணொளிகள் குறித்து தீவிர விசாரணை
இலங்கையில் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் இருவர், விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தபோது பெண் விருந்தினர்களை இரகசியமாகப் படம்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு - நாரஹன்பிட்டியில் உள்ள விருந்தகத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.
கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தலா 500,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அவர்கள் பதிவு செய்த காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டனவா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கிரிக்கெட்டில் ஒழுக்கங்கள் தொடர்பான விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு இது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
