ஈரான் போரில் ரஷ்யாவின் மறைமுக ஆதரவு? அமெரிக்க ராணுவ தகவல்கள் பகிர்ந்ததாக அதிர்ச்சி தகவல்

அமெரிக்க படையினர், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் எங்கு உள்ளன, அவை எவ்வாறு நகர்கின்றன என்பதற்கான தகவல்களை ரஷ்யா ஈரானுடன் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

ஈரான் போரில் ரஷ்யாவின் மறைமுக ஆதரவு? அமெரிக்க ராணுவ தகவல்கள் பகிர்ந்ததாக அதிர்ச்சி தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஈரானுக்கு அமெரிக்க ராணுவத்தின் நகர்வுகள் மற்றும் தளங்கள் தொடர்பான முக்கிய உளவு தகவல்களை ரஷ்யா வழங்கி வருவதாக அமெரிக்க நுண்ணறிவு அறிக்கைகளை அறிந்த பல்வேறு தரப்புகள் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது, ஈரான் தொடர்பான போர்நிலையில ரஷ்யா மறைமுகமாக தலையிட முயற்சித்திருக்கலாம் என்பதற்கான முதல் முக்கிய சுட்டுக்காட்டாக பார்க்கப்படுகிறது.

இந்த தகவல்களின் படி, அமெரிக்க படையினர், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் எங்கு உள்ளன, அவை எவ்வாறு நகர்கின்றன என்பதற்கான தகவல்களை ரஷ்யா ஈரானுடன் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யாவின் மேம்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் எடுக்கப்பட்ட படங்களும் இதில் இடம்பெற்றிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த உதவிக்குப் பதிலாக ரஷ்யாவுக்கு ஈரான் என்ன வழங்குகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க ரஷ்யாவின் கிரெம்லின் மற்றும் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்திடம் சர்வதேச ஊடகங்கள் விளக்கம் கேட்டுள்ளன. இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.

ரஷ்யா வழங்கிய உளவு தகவல்களை பயன்படுத்தியே ஈரான் சில தாக்குதல்களை மேற்கொண்டதா என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் கடந்த சில நாட்களாக அமெரிக்க படையினர் தங்கியிருந்த பகுதிகளை குறிவைத்து ஈரானிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, குவைத்தில் அமெரிக்க படையினர் தங்கியிருந்த தற்காலிக ராணுவ முகாமை குறிவைத்து ஈரானிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அந்த தாக்குதலில் ஆறு அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த விவகாரத்தை அறிந்த ஒருவரின் கூற்றுப்படி, “இந்த தகவல்கள் ரஷ்யா இன்னும் ஈரானுடன் நெருக்கமான உறவை வைத்திருக்கிறது என்பதை காட்டுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சீனாவும் ஈரானுக்கு சில வகை உதவிகளை வழங்க தயாராக இருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. அமெரிக்க நுண்ணறிவு தகவல்களின் படி, சீனா ஈரானுக்கு நிதி உதவி, உதிரி பாகங்கள் மற்றும் ஏவுகணை தொடர்பான கூறுகள் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் சீனா இதுவரை நேரடியாக இந்த போரில் தலையிடவில்லை.

சீனாவின் முக்கிய கவலை எரிசக்தி விநியோகம் என்று கூறப்படுகிறது. சீனா தனது எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை ஈரானிலிருந்து பெறுகிறது. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்ற அழுத்தத்தை சீனா ஈரானிடம் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க மத்திய நுண்ணறிவு அமைப்பு (CIA) கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. சீன தூதரகத்திடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் இந்த தகவல்கள் குறித்து பேசும்போது, “எல்லா நகர்வுகளையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்து அமெரிக்க அரசாங்கம் முழுமையாக அறிந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், பொதுவாகவோ மறைமுகமாகவோ அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் எந்த நடவடிக்கையும் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ரஷ்யா மற்றும் சீனா இந்த போரில் நேரடியாக முக்கிய காரணியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் ஈரான் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் போரின் போது ஈரான் வழங்கிய ஷஹேத் ட்ரோன்கள் மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ரஷ்யாவில் ஈரான் வடிவமைப்பில் ட்ரோன்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதற்குப் பதிலாக ஈரான் தனது அணு திட்டத்தை மேம்படுத்துவதற்காக ரஷ்யாவின் உதவியை நாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளில் 50,000க்கும் அதிகமான படையினர், 200க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

இந்த போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்க ராணுவத்தின் முக்கிய இலக்கு, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திறனை முற்றிலும் தகர்த்தழிப்பதாக பெண்டகன் அதிகாரிகள் கூறியுள்ளனர். (News21)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT