அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும்

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மே 28, 2025 - 10:21
அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும்

தென்மேல் பருவப் பெயர்ச்சி காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சில இடங்களிலும் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம். வடமத்திய மாகாணத்திலும் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!