வீடியோ வைரலானதை அடுத்து 16 வயது சிறுவனைச் துன்புறுத்திய குற்றச்சாட்டில் 4 பேர் கைது
காலியில் திருட்டு குற்றச்சாட்டில் சிக்கிய 16 வயது சிறுவன் ஒருவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அந்தச் சிறுவன் தாக்கப்படும் வீடியோ ஒன்று வைரலாகி பரவியதை அடுத்தே இந்தக் கைது நடைபெற்றுள்ளது.
பெரலபனத்தர, தண்டேனியகந்தை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இந்தச் சிறுவன், காலி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட சொத்துத் திருட்டு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்தான். தொடர்ந்து ஜூன் 3 ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தற்போது சிறைக் காவலின் கீழ் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
சிறுவனின் தாய், தனது மகன் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டதாகப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து, ஜூன் 3 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 40 வயது பெண் ஒருவர், அவரது 47 வயது கணவர், அவர்களது 19 வயது மகன் மற்றும் 17 வயது மகள் என நான்கு பேரும் காலி, மிலித்துவ பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நான்கு சந்தேக நபர்களும் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். திருட்டு மற்றும் இளம் சந்தேக நபரின் மீதான தாக்குதல் ஆகிய இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.