போட்டியில் தோற்றாலும் டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய இங்கிலாந்து அணி வீரர்
202 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.
டேவிட் வார்னர் 39 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 30 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் கிரிஸ் ஜார்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
202 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
பில் சால்ட் 37 மற்றும் ஜோஸ் பட்லர் 42 ரன்களை சேர்க்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவிய பட்சத்திலும் அந்த அணி வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் இந்த மைல் கல்லை எட்டும் இரண்டாவது இங்கிலாந்து வீரர் மற்றும் 13ஆவது சர்வதேச வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஆதில் ரஷித் 100 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்திருந்தார்.
108 போட்டிகளில் விளையாடி இரண்டு முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் சேர்த்து 111 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். கிறிஸ் ஜோர்டன் 92 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளார்.