இலங்கையில் குறுகிய பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ
சீனாவின் வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ, இன்று (12) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சீனாவின் வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ, இன்று (12) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தனது ஆப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு வாங் யீ இலங்கைக்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயமாக இது பார்க்கப்படுகின்றது.
அத்துடன், 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகச் சீனாவினால் அறிவிக்கப்படவுள்ள விசேட நிதி உதவித் திட்டம் குறித்து அவர் அறிவிப்பை வெளியிடலாம் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனது இரண்டு நாள் பயணத்தின் போது வாங் யீ, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களுடன் அவர் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
குறிப்பாக, இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் உத்தேச ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது விரிவாகக் கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.