தமிழ் இளைஞருக்கு பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் ‘துரித விசாரணை’
மலையகத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து துரித விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் வைத்து 23 வயதுடைய சண்முகநாதன் யுவராஜ் என்ற இளைஞர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில், நுவரெலியா மாவட்டத்தின் உயர்மட்ட பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் அறிக்கை கோரியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, விசாரணையை ஆரம்பித்துள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு ஹெல்மட்டுடன் சிவில் உடையில் வந்த ஒருவர் தன்னைத் தாக்கி, ‘ஆசன வாயில் விக்கெட் தடியைச் செருகுவதாக’ அச்சுறுத்தியதாக அந்த இளைஞர் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது. தற்போது இது தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரிடம் அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன. அந்த அறிக்கைகள் கிடைத்த பின்னரே இச்சம்பவத்திற்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்,” என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் வலய அலுவலக ஒருங்கிணைப்பு அதிகாரி குமுதினி விதான தெரிவித்தார்.
நட்புக்காக சித்திரவதை
ஜா-எல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் குறித்த இளைஞர், தனிப்பட்ட தகராறு ஒன்று தொடர்பில் விளக்கமளிப்பதற்காக தனது தந்தையுடன் பெப்ரவரி 23ஆம் திகதி தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற போதே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். பொலிஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது அங்கிருந்த அதிகாரி ஒருவருக்கு வந்த தொலைபேசி அழைப்பினைத் தொடர்ந்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தாக்கி சித்திரவதை செய்ததாக யுவராஜ் கூறுகிறார்.
“எனக்கு எதிராக முறைப்பாடு செய்த பெண்ணின் தந்தை பொலிஸ் நிலையத்துக்கு வந்து சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பெல்ட் போட்டிருந்த ஒருவர் தொலைபேசி அழைப்பை எடுத்துக்கொடுத்தார். OIC பேசுவதாகக் சொன்னதன் பிறகு அவர் பேசினார். அதற்குப்பிறகு சிங்களம் பேசும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கண்ணால் சைகை செய்தவுடன், அவர் உடனடியாக என்னிடம் வந்து கேள்வி கேட்பதற்கு முன்பே காதுகளிலும் தலையிலும் அடித்தார்,” எனத் தெரிவித்த அவர், தாக்குதல் குறித்து முறைப்பாடு செய்தால் ‘பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புவதாக’ அந்த உத்தியோகத்தர் தன்னை அச்சுறுத்தியதாகவும் மேலும் கூறினார்.
‘தொடர்ச்சியாக நடைபெறுகின்றது’
இந்த சட்டவிரோத செயல் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் வலய அலுவலக ஒருங்கிணைப்பு அதிகாரி, நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் சித்திரவதை நடைமுறை குறித்து தனது கடும் அதிருப்தியை வெளியிட்டார்.
கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பொன்றின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்திலிருந்த அதிகாரி ஒருவரின் தேவைக்காக தனக்கு சித்திரவதை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞர் முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்து ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்னவென்று வினவியபோது, இவ்வாறான தலையீடுகள் இன்றும் பொலிஸ் நிலையங்களுக்குள் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது என்ற விடயத்தை நிராகரிக்க முடியாது என அவர் வலியுறுத்தினார்.
“உண்மையில் அவ்வாறான விடயங்கள் நடப்பதில்லை என்று கூற முடியாது. ஏனெனில் எமது நாட்டு பொலிஸ் நிலையங்களின் நிலைமை இன்னும் மாறவில்லை. குறிப்பாக இது போன்ற மாகாணங்களில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை விட, ஏதேனும் ஒரு வெளிநபர் அல்லது தரப்பினரின் தலையீட்டின் மூலம் உயர் அதிகாரிகளுடன் பேசி தமக்குத் தேவையான முறையில் விசாரணைகளை முன்னெடுப்பதே இடம்பெறுகின்றது. தமக்கு எதிரான நபராக இருந்தால் இவ்வாறு துன்புறுத்துகிறார்கள். அல்லது தமக்கு சாதகமான முறையில் முறைப்பாட்டை அல்லது குற்றச்சாட்டை கையாளுகிறார்கள். உண்மையில் இது தவறான விடயம்,” என்று கூறிய அவர், இந்த நிலையை மாற்றுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால் பாரியதொரு பொறுப்பு உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
தாக்கியதாகக் கூறினால் சிறையில் அடைப்போம்
சித்திரவதைக்கு உள்ளான யுவராஜ் மற்றும் அவரது தந்தை கூறுகையில், பொலிஸார் தாக்கியதை வெளிப்படுத்த வேண்டாம் என பொலிஸாரிடமிருந்தும் வைத்தியசாலையில் இருந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
“26ஆம் திகதி மகனை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்த பின்னர் இரவில் அவருக்கு சுகயீனம் ஏற்பட்டது. மயக்கம், வாந்தி ஆகியவை இருந்தன. பிறகு மகனை நுவரெலியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம். மார்ச் 01ஆம் திகதி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்த பிறகு மறுபடியும் சுகயீனம் ஏற்பட்டது. அப்போதுதான் பொலிஸார் தன்னை அடித்ததாகவும், வீட்டாரிடமோ அல்லது வேறு யாரிடமோ சொன்னால் சிறையில் அடைப்பதாக அச்சுறுத்தியதாகவும் மகன் சொன்னார்,” என இளைஞனின் தந்தையான எஸ். சண்முகநாதன் தெரிவித்தார்.
பொலிஸ் தாக்குதலுக்கு உள்ளான யுவராஜிடம் இது குறித்து வினவியபோது, தன்னைத் தாக்கிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஏனைய பொலிஸாரின் அச்சுறுத்தல் காரணமாக ஆரம்பத்தில் நடந்தவற்றை எவரிடமும் சொல்லப் பயந்ததாக அவரும் தெரிவித்தார்.
“மார்ச் 4ஆம் திகதி எனக்கு மறுபடியும் சுகயீனம் ஏற்பட்டது. கண்கள் தெரியாமல் தலைசுற்றத் தொடங்கியது. அதன் பிறகு குடும்பத்தவர்கள் என்னை மறுபடியும் நுவரெலியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனார்கள்”. இரண்டாவது தடவை மூன்று நாட்கள் தான் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றதாகவும், அந்த மூன்று நாட்களிலும் வைத்தியசாலையில் சிலர் தொல்லை தரும் வகையில் நடந்துகொண்டு தன்னை வலுக்கட்டாயமாக வைத்தியசாலையை விட்டு வெளியேற்ற முயன்றதாகவும் இளைஞர் குற்றம் சுமத்துகிறார்.
வைத்தியசாலையிலிருந்து தொல்லைகள்
“ஆஸ்பத்திரியில் எனக்கு சொன்னதே நோய் எதுவும் இல்லை என்றுதான். நான் ஆஸ்பத்திரியில் இருந்தபோது பலமுறை பொலிஸார் வந்து கடுமையாகப் பேசி, ‘டிக்கட்’ வெட்டிக்கொண்டு வீட்டுக்குப் போகச் சொன்னார்கள். ‘உன்னை பொலிஸார் அடிக்கவில்லை என சொல்லு’ என்று என்னை அச்சுறுத்தினார்கள்,” என யுவராஜ் தெரிவித்தார்.
யுவராஜ் கூறுவதற்கமைய, அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறிய தினத்தின் இறுதி சில மணி நேரங்களிலேயே சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த நேரத்திலும் வைத்தியசாலை பணிக்குழாமின் பல்வேறு தரப்பினர் தன்னை வெளியேறுமாறு அச்சுறுத்திக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
இது தொடர்பாக நுவரெலியா பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து முறைப்பாடு செய்ததாகவும், பின்னர் அந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக வைத்தியசாலைக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தனது மகனை அச்சுறுத்தியதாக யுவராஜின் தந்தை சண்முகநாதன் கூறுகிறார்.
நாம் திரட்டிய தகவல்களுக்கு அமையவும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் விளக்கத்திற்கு அமையவும், குறித்த இளைஞருடன் நண்பராக இருந்த கொத்மலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரின் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்தப் பொலிஸ் நிலையத்தின் உயரதிகாரி ஒருவரின் அழுத்தத்தின் காரணமாக தலவாக்கலை பொலிஸ் உத்தியோகத்தர்களால் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
குறித்த தாக்குதலும் சித்திரவதையும் இடம்பெற்ற வேளையில் அந்த யுவதியின் பெற்றோரும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திலேயே இருந்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்திற்கேனும் கட்டுப்படாத பொலிஸார்
சந்தேகநபர்கள் மற்றும் கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக சித்திரவதைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை பொலிஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையும் மிகவும் அபகீர்த்தியான தொடர் வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், பல சந்தர்ப்பங்களில் இது குறித்து உச்ச நீதிமன்றம் கூட பல்வேறு தீர்ப்புகள் மற்றும் சட்ட விளக்கங்கள் ஊடாக அவ்வந்தக் காலப்பகுதிகளில் பதவியில் இருந்த பொலிஸ்மா அதிபர்களுக்கு, சந்தேகநபர்களை சித்திரவதை செய்வதை நிறுத்தி அதனை கண்காணிப்பதற்கு தேவையான உரிய வழிகாட்டல்களை வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று ஒரு பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பில் குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது கடமை நேர அதிகாரி நேரடியாகப் பொறுப்புக் கூற வேண்டும் என்பது பொலிஸ் மா அதிபரின் ஆவணங்களிலும், 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க, சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கு எதிரான சமவாயச் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
