ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் மீது சவுதி மற்றும் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்
சவுதி அரேபியா, அமெரிக்க மத்திய கட்டளையுடன் (CENTCOM) இணைந்து, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று புதன்கிழமை (29) அதிகாலையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், சமீபத்தில் சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட ட்ரோன் (Drone) தாக்குதல்களுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈராக் எல்லைக்குள் இருந்து ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்களால் ஏவப்பட்ட பல ட்ரோன்கள், சவுதியின் ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பெட்ரோலிய ஆலைகளைத் தாக்க முயன்றபோது, அவை சவுதி வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டன.
"நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால், எங்கள் மீது நடத்தப்படும் எந்தவோர் ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுப்போம்" என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் அலி அல்-சைதி, நாளை வியாழக்கிழமை சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈராக் தனது நிலப்பரப்பை அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்த அனுமதிக்காது என்று அந்நாட்டு இராணுவம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், ஈரான் ஆதரவு பெற்ற 'ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு' (Islamic Resistance in Iraq) அமைப்பு, சவுதியின் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை என்றும், தங்களுக்கு இந்தத் தாக்குதலில் எவ்விதப் பங்கும் இல்லை என்றும் கூறியுள்ளது.