ஈரானிய கச்சா எண்ணெய்க்கான கொடுப்பனவுகளில் சிக்கல்கள் இல்லை; இந்திய மத்திய அரசாங்கம் அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாக இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்து வருகின்றன. ஈரானிய எண்ணெய்க்கான கொடுப்பனவுகளை செலுத்துவதில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவுக்கு வரவிருந்த ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சமீபத்தில் சீனாவுக்குத் திருப்பி விடப்பட்டதற்கு "பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள்" காரணமல்ல என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.
கடந்த மாதம் அமெரிக்கா அறிவித்த ஈரானிய எண்ணெய் மீதான தடைகளில் இருந்து வழங்கப்பட்ட விலக்கைத் தொடர்ந்து, இந்தியா ஈரானிய கச்சா எண்ணெயை வாங்குகிறது என்பதற்கான முதல் உத்தியோகபூர்வமான உறுதிப்படுத்தல் இதுவாகும்.
அத்துடன், 44,000 மெற்றிக் தொன் ஈரானிய திரவ பெற்றோலிய எரிவாயுவை ஏற்றி வந்த ஒரு கப்பல் ஏப்ரல் 2-ஆம் திகதி மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்து, தற்போது சரக்குகளை இறக்கி வருவதையும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. வரும் மாதங்களில் இந்தியாவின் "கச்சா எண்ணெய் தேவைகள் முழுமையாகப் பாதுகாப்பான நிலையில் உள்ளன" என்பதையும் அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சுமார் 600,000 பீப்பாய் ஈரானிய எண்ணெயுடன் குஜராத்தின் வாடினார் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த எஸ்வாத்தினி (Eswatini) நாட்டு கொடி ஏந்திய 'பிங் ஷுன்' (Ping Shun) என்ற கப்பல், கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென தனது இலக்கை சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள டோங்யிங்கிற்கு மாற்றியது.
இதற்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களே காரணமாக இருக்கலாம் என்று வர்த்தக வட்டாரங்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தன.
கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தக் கப்பலே முதல் விநியோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
