அடுத்த சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும்; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைகொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது (30-40) கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

