அமெரிக்காவை மிரட்டும் பாடசாலை துப்பாக்கிச்சூடுகள்; நால்வர் பலி!

சம்பவத்தையடுத்து, அதே பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 5, 2024 - 19:05
அமெரிக்காவை மிரட்டும் பாடசாலை துப்பாக்கிச்சூடுகள்; நால்வர் பலி!

அமெரிக்காவில் ஆங்காங்கோ துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாடசாலைகளில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன. 

இவ்வாண்டு மாத்திரம் 45 பாடசாலைகளில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமாக CNN அறிக்கையிட்டுள்ளது. 

45ஆவது சம்பவமாக அமெரிக்கா - Georgia மாநிலத்தில் ஓர் உயர்நிலைப் பாடசாலையில் நேற்று புதன்கிழமை (04) நடந்த துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இது மிக மோசமான துப்பாக்கிச் சூடு என CNN சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்நத் துப்பாக்கிச்சூட்டில் இரு மாணவர்களும், ஆசிரியர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் விவரம் : 

மேசன் ஷெர்மர்ஹார்ன் (Mason Schermerhorn), 14 வயது மாணவர்
கிறிஸ்டியன் அங்குலோ (Christian Angulo), 14 வயது மாணவர்
ரிச்சர்ட் ஆஸ்பின்வால் (Richard Aspinwall), ஆசிரியர்
கிறிஸ்டினா ஐரிமி (Christina Irimie), ஆசிரியர்

சம்பவத்தையடுத்து, அதே பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டு நடத்தப்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார். அத்துடன், துப்பாக்கிக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டுமென்று அவர் மீண்டும் அழைப்பு விடுத்தார். அந்தச் சம்பவத்தை அமெரிக்க மக்கள் இனியும் சாதாரணமாகக் கருதக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான கமலா ஹாரிஸ், அதுபோன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். 

குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!