200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையின் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையால் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மணித்தியாலங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் 100 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று காலை 8.30 முதல் இன்று அதிகாலை 4 மணி வரையில் அதிக மழை கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. கம்பஹா - கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீட்டரும், வேயங்கொட பகுதியில் 238 மில்லிமீட்டரும், அவிசாவளை பகுதியில் 230 மில்லிமீட்டரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தற்போதைய மழை நிலவரத்தால் கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் குருவிட்ட பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரிவுக்கும் முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
