இன்று நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது
நாட்டில் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழை நிலைமை தாபிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழைச் சூழல் தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என்று திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமான உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

