அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு
வங்கி கணக்குகளை விரைவாக ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இரண்டு இலட்சம் அஸ்வெசும பயனாளிகள் இதுவரை வங்கி கணக்குகளை ஆரம்பிக்காததால், அவர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க முடியாதுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், "இதுவரை வங்கி கணக்குகளை ஆரம்பிக்காத பயனாளிகள், வங்கி கணக்குகளை விரைவாக ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதேச சபைகளால் அஸ்வெசும கணனி கட்டமைப்பிலிருந்து வழங்கப்படும் கடிதத்தின் மூலம் தமது பிரதேசங்களிலுள்ள மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி கிளைகளில் அஸ்வெசும பயனாளிகள் தமக்கான கணக்குளை ஆரம்பிக்க முடியும்.
இதன் பின்னர் வங்கிகளால் அந்த தகவல்கள் நலன்புரி நன்மைகள் சபைக்கு அறிவிக்கப்படும். தேசிய அடையாள அட்டை இல்லாததால், வங்கி கணக்குகளை ஆரம்பிக்காதிருப்பவர்கள் ஆறு மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கிகளில் ஆறு மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க முடியுமென்ற நிபந்தனையுடன் கணக்குகளை ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது.''என கூறியுள்ளார்.