வானிலை தொடர்பில் வெளியான சிவப்பு அறிவித்தல்
அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் செயற்படும் பல நாள் கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு இன்று (16) அதிகாலை 3.00 மணியளவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் பகுதியில் மிக பலமான காற்று வீசக்கூடும். அத்துடன், கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டில் தற்போது நிலவும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் கனமழை பெய்யலாம்.
மேலும், மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-60 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.