களனி கங்கை நீர் தரம் தொடர்பான அவசரநிலை: கொழும்பு மற்றும் கம்பஹாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது!
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகம் முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் உட்கட்டமைப்பு பகுதிக்கு அருகில் நீரின் தரம் பாதிக்கப்படக்கூடிய அவசர நிலைமை ஏற்பட்டதை அடுத்து, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) ஆலோசனையின் பேரில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) இந்தத் தற்காலிக நீர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, அம்பதலை மற்றும் களனி வலது கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் வழங்கும் உட்கட்டமைப்புகளுக்கு அருகில் உள்ள நீரின் தரம் குறித்து எழுந்த கவலைகளை அடுத்து, முப்படைகளின் உதவியுடன் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விரிவான சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த நீர்த் தரப் பரிசோதனைகளைத் தொடர்ந்து, களனி கங்கை நீர் உட்கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இருப்பினும், பத்தரமுல்லை, கோட்டை மற்றும் பாமன்கடை ஆகிய சில பகுதிகளில் நீர் விநியோகத்தை சீரமைப்பதில் இன்னும் சில காலதாமதங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த விநியோகத் தடையால் நுகர்வோருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.