நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பதிவாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக, நாளை டிசெம்பர் 16ஆம் திகதி முதல் நாட்டில் மழையுடனான வானிலை நிலவரம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பதிவாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அதேபோல் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இதனுடன், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் நிகழும் விபத்துகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.