தற்காலிக பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா - இனியாவது மீண்டு வருமா இலங்கை அணி?
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்மாத இறுதியில் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. போட்டிகள் ஜூலை 27ல் தொடங்கும் நிலையில், சனத் ஜெயசூர்யா நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட், இலங்கை அணி டி20 உலகக் கோப்பையயில் மோசமாக தோல்வியடைந்ததை அடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது. கடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் இலங்கை படுமோசமான தோல்வியை சந்தித்தது.
இவ்வாறு தொடர் தோல்விகளில் இருந்து இலங்கை அணியை மீட்டெடுக்கும் பொருட்டு தற்போது தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயசூர்யா இதற்கு முன் இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் செயல்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா.
அவரது அதிரடி பேட்டிங் திறன் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிவர். தன் அணிக்கு தேவைப்படும் நேரங்களில் பந்து வீசி விக்கெட்டையும் வீழ்த்துபவர். ரிச்சர்ட்ஸ், சச்சினை அடுத்து மாஸ்டர் பிளாஸ்டர் எனும் பெயரை பெற்ற வீரர்.
1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியில் இவரது பங்கு பிரதானமானது. அதே போல் 2007 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2009 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை அணியில் விளையாடியவர். கடந்த 2011-ல் ஓய்வு பெற்றார்.
தனது அதிரடி பேட்டிங்கின் ஊடாக ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவர்.