வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்

இதற்கு முன்னர், வெனிசுலாவின் எண்ணெய் துறை, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை டெல்சி ரோட்ரிக்ஸ் மேற்பார்வை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 4, 2026 - 09:14
வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்

வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை வெனிசுலாவின் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் பதற்றம் நிலவி வருகிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை வற்புறுத்தி வந்தார். போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா அரசே உடந்தையாக இருந்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

கடந்த செப்டெம்பர் மாதம் முதல் அமெரிக்கா நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்பட்ட கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பகுதிகளில் பயணித்த படகுகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதுவரை 35 படகு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 115 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, அமெரிக்கா தன்னை ஆட்சியில் இருந்து அகற்றவும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்றவும் திட்டமிடுவதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றம்சாட்டி வந்தார். மேலும், வெனிசுலா மீது தாக்குதல் நடத்த உத்தரவிடுவேன் என டிரம்ப் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை வெனிசுலா மீது அமெரிக்கா தீவிர தாக்குதலை நடத்தியது. தலைநகர் கராகஸ் நகரில் அமெரிக்க போர் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்று குண்டுகளை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், புளோரிடாவில் உள்ள தனது கிளப்பில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கியிருந்த டிரம்ப், அங்கிருந்தபடி தனது சமூக வலைத்தளத்தில் வெனிசுலா தாக்குதல் தொடர்பான தகவலை வெளியிட்டார். அதில், அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து வெனிசுலா மீது வெற்றிகரமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், வெனிசுலா தற்காலிகமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே, வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன்னர், வெனிசுலாவின் எண்ணெய் துறை, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை டெல்சி ரோட்ரிக்ஸ் மேற்பார்வை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!