சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிப்பு: 21 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியூயாங் நகரில் அமைந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் வெடிப்பில் 21 பேர் உயிரிழந்ததுடன் 61 பேர் காயமடைந்துள்ளனர் என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 4.40 மணியளவில் (08:40 GMT) சாங்ஷா லியூயாங் ஹுவாஷெங் பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பு ஏற்பட்டதையடுத்து, 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மக்களை பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். மீட்பு பணிகளில் சுமார் 500 பேர் ஈடுபடுத்தப்பட்டதுடன், சிக்கியவர்களை கண்டறிய ரோபோக்களும் பயன்படுத்தப்பட்டன.
மீட்பு பணிகள் நடைபெறும் பகுதியில் உள்ள இரண்டு துப்பாக்கி தூள் கிடங்குகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இரண்டாம் நிலை விபத்துகளைத் தவிர்க்க ஈரப்பதம் அதிகரித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
வெடிப்பின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், அருகிலிருந்த குடியிருப்பு கட்டிடங்களின் ஜன்னல்கள் கூட சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொழிற்சாலையின் பொறுப்பாளர் மீது அதிகாரிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீன அதிபர் ஷி ஜின்பிங், மீட்பு பணிகளை தீவிரப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து பொறுப்பாளர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
