முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு
மந்திரியாறு நீரோடை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது குறித்த நபர், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு, வாழைச்சேனை, கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலையால் இழுத்துச் சென்ற நபரின் சடலம், இரண்டு நாட்களின் பின்னர் இன்று ( மே 22 ) மீட்கப்பட்டுள்ளது.
மந்திரியாறு நீரோடை பகுதியில் செவ்வாய்க்கிழமை ( மே 20) மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது குறித்த நபர், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்றும், கடந்த இரு நாட்களாக உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் தேடிவந்த நிலையில், இன்று காலை அவர், இடுப்புக்கு கீழ் பகுதியற்ற நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.