இலங்கையில் காணாமல் போன திறைசேரி பணம் ஓமானில் மீட்கப்பட்டதா?
ஆசிய நாடொன்றிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் அரச பொலிஸார் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓமானில் உள்ள வங்கி ஒன்றின் ஊடாக அந்தப் பணத்தை அந்நாட்டு நாணயமாக மாற்ற முயற்சித்தபோது, ஓமான் அரச பொலிஸார் அதனைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே, இந்தப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தப் பணம் எந்த ஆசிய நாட்டிலிருந்து சைபர் மோசடி மூலம் திருடப்பட்டது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், அண்மையில் இலங்கையின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலரும், தபால் திணைக்களத்திலிருந்து 625,000 அமெரிக்க டொலரும் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனால், ஓமான் நாட்டில் மீட்கப்பட்ட பணத்துக்கும் இலங்கையில் காணாமல் போன பணத்துக்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
அதேவேளை, இலங்கையைத் தவிர வேறு எந்த ஆசிய நாட்டிலிருந்தும் அண்மைக் காலத்தில் இவ்வளவு பெரிய தொகை பணம் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகாததும் குறிப்பிடத்தக்கதாகும்.
